பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாட்டு வண்டிகளில் வந்த இந்துமக்கள் கட்சியினர்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாட்டு வண்டிகளில் வந்த இந்துமக்கள் கட்சியினர் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தினர்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாட்டு வண்டிகளில் வந்த இந்துமக்கள் கட்சியினர்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்க, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று வந்தார். அப்போது பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதை வாபஸ் பெற வலியுறுத்தியும், அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் 2 மாட்டு வண்டிகளில் பயணம் செய்தபடி திருமண வீட்டுக்கு சென்றனர்.

இதனால் திருமண விழா பரபரப்பானது. அப்போது இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், நிருபர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசலை சரக்கு-சேவை வரிக்குள் கொண்டு வந்தால், விலை கட்டுக்குள் இருக்கும். பஸ் கட்டண உயர்வுக்கு போக்குவரத்து கழக நிர்வாகமே காரணம். தனியார் பஸ்கள் லாபத்தில் இயங்கும் போது, அரசு பஸ்கள் மட்டும் எப்படி நஷ்டத்தில் இயங்குகிறது. நிர்வாக சீர்கேடு, ஊழல், ஒழுங்கீனமே அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்துக்கு காரணம் ஆகும். இதற்கான பலனை பொதுமக்கள் மீது சுமையாக ஏன் ஏற்ற வேண்டும். எனவே, போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீர்படுத்தி, ஊழலை அரசு ஒழிக்க வேண்டும். பொதுமக்கள் பொறுத்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். பஸ் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

கவிஞர் வைரமுத்து, ஆண்டாளை தனது தமிழ் தாய் என ஒப்புக்கொண்டு இருக்கிறார். வைரமுத்து மீது அவதூறு கற்பிப்பது எங்களுடைய நோக்கமல்ல. எனவே, ஆண்டாள் தாயார் சன்னதிக்கு வந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதில் எந்தவித தவறும் இல்லை. மன்னிப்பு கேட்காவிட்டால் அறப்போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் என்று தெளிவாக வந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு, மக்களிடம் பேராதரவு இருக்கிறது. கமல்ஹாசனுக்கும், அப்துல்கலாம் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்துல்கலாம் சிறந்த தேசபக்தர், மக்கள் ஜனாதிபதியாக திகழ்ந்தவர். அவர் வாழ்நாள் முழுவதும் இந்தியாவை நேசித்தார். அவருடைய கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டவர் கமல்ஹாசன்.

தற்போது மலிவான அரசியலுக்காக அப்துல்கலாமின் புகழை, கமல்ஹாசன் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவின் வீரப்பெண்மணி பத்மாவதியை இழிவுபடுத்தும் வகையில், பத்மாவத் திரைப்படத்தில் காட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே, இந்து தலைவர்களுக்கு அந்த திரைப்படத்தை திரையிட்டு காண்பித்த பின்னரே தமிழகத்தில் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, அமைப்பு பொதுச்செயலாளர் ரவிபாலன், மண்டல தலைவர் துரைக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com