தடையை மீறி ஜல்லிக்கட்டு; போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய மாடுபிடி வீரர்கள்

சோழவந்தான் அருகே மலைக்கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போலீசாரை கண்டதும் தலை தெறிக்க மாடுபிடி வீரர்கள் ஓடினார்கள். 2 வேன், 16 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு; போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய மாடுபிடி வீரர்கள்
Published on

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே மலைக்கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போலீசாரை கண்டதும் தலை தெறிக்க மாடுபிடி வீரர்கள் ஓடினார்கள். 2 வேன், 16 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜல்லிக்கட்டு

சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு பிரியர்கள் இணையதளம் மூலமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைப்பு விடுத்தனர். இதற்காக நேற்று முன்தினம் இரவு காடுபட்டி அருகே உள்ள மலையில் உள்ள கன்னிமார் கோவில் அருகே மின்விளக்கு வசதியுடன் மைதானத்தை தயார் செய்தனர்.
இதை தொடர்ந்து கிராமத்தை சேர்ந்த சில பெரியவர்களின் ஆதரவோடு பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் டோக்கன் வினியோகிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த காளைகள் வரவழைக்கப்பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 ஜல்லிக்கட்டு மாடுகளும், 100 மாடுபிடி வீரர்களும் வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டன. சீறி பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினார்கள். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் அங்கிருந்து வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்தோடியது. இதனால் அந்த கிராமமே களை கட்டியது.

போலீசார் விரைந்தனர்

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வந்ததை அறிந்ததும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியவர்களும். அங்கு வந்திருந்த மாடுபிடி வீரர்களும் தலைதெறிக்க ஓடினார்கள். ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சில மாடுகள் தாமோதரன்பட்டி மலையிலும், வடகாட்டுப்பட்டி மலையிலும் ஓடின. போலீசார் அங்கு நின்றிருந்த 2 மினிவேன், 16 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே போலீசார் சென்ற பிறகு ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரர்கள், நேற்று இரவு விடிய, விடிய செல்போன் வெளிச்சத்தில் காளைகளை தேடி வந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com