பெரியாரின் கொள்கைகளை அரியணையில் ஏற்றியவர் கருணாநிதி ஆ.ராசா பேச்சு

தமிழகத்தில் பெரியாரின் கொள்கைகளை அரியணையில் ஏற்றியவர் கருணாநிதி என்று தர்மபுரியில் நடந்த புகழஞ்சலி கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசினார்.
பெரியாரின் கொள்கைகளை அரியணையில் ஏற்றியவர் கருணாநிதி ஆ.ராசா பேச்சு
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில், மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் தர்மபுரியில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அப்துல்காதர், இளசை சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது:-

பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளையும், சீர்திருத்த கொள்கைகளையும் தமிழகத்தில் அரியணை ஏற்றிய பெருமை கருணாநிதியையே சேரும். கருணாநிதி திராவிட தத்துவத்தின் தலைவர், இலக்கியத்தின் மூலம் திராவிட இயக்க கொள்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர். மாநில கட்சியின் தலைவராக இருந்தபோதும் தனது அரசியல் அறிவின் மூலம் ஏழை,எளிய மக்களின் வளர்ச்சிக்கான சீர்த்திருத்தங்களை இந்திய அளவில் அமல்படுத்துவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

1951-ம் ஆண்டில் இந்தியாவின் சட்ட மந்திரியாக இருந்த அம்பேத்கர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். ஆணாதிக்கவாதிகளின் கடும் எதிர்ப்பால் அந்த சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பதவி விலகினார். அம்பேத்கரின் கனவை நனவாக்கும் வகையில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை அளிக்கும் சட்டத்தை இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் கருணாநிதி நிறைவேற்றினார். வேறுபாடுகளை மறந்து அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழும் வகையில் அவர் கொண்டு வந்த பெரியார் சமத்துவபுரம் திட்டம் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் உதாரணம். இப்படி கருணாநிதி கொண்டு வந்த சமூக நீதிக்கான திட்டங்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏராளம்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு இந்தியாவை இந்து நாடாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. கருணாநிதி மறைந்தாலும், அவர் வழியில் இந்த இயக்கத்தை கட்டிகாத்து மதவாத சக்திகளை முறியடித்து திராவிட இயக்க கொள்கைகளை வென்றெடுக்கும் ஆளுமையாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் தாமரைச்செல்வன், சுகவனம், மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன், கீரை விசுவநாதன், நகர செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், கோபால், தேசிங்கு, சிவப்பிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com