சோபா தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

பூந்தமல்லி அருகே சோபா தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
சோபா தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
Published on

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், செட்டிப்பேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சோபா தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வந்தது. இங்கு தயாரிக்கப்படும் சோபாக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் பெரிய கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர். நேற்று மாலை கம்பெனியின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதை கண்ட ஊழியர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கம்பெனிக்குள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பஞ்சு, கட்டை, ரெக்சின் உள்ளிட்டவைகள் இருந்ததால் தீ மளமளவென கம்பெனி முழுவதும் பரவியது. ஊழியர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பொருட்கள் சிலவற்றை வெளியே கொண்டு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சோபா கம்பெனியில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கம்பெனியில் எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் கம்பெனியில் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த சோபாக்கள், அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசம் ஆனது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீ விபத்து சம்பவம் நடந்த இடம் நசரத்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், வெள்ளவேடு என மூன்று போலீஸ் நிலையத்தின் எல்லையில் வருவதால் இதுபற்றி வழக்கை யார் பதிவு செய்வது என்பதில் 3 போலீஸ் நிலையங்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com