108 ஆம்புலன்சில் சென்றபோது பிரசவ வலி: வயல்வெளியில் குழந்தை பெற்ற இளம்பெண் - கிராம பெண்கள் பிரசவம் பார்த்தனர்

ஆம்பூர் அருகே 108 ஆம்புலன்சில் சென்றபோது கர்ப்பிணிக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து வயல்வெளியில் கிராம பெண்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
Published on

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே கீழ்மிட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 27), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சோனியா (23). இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சோனியா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சோனியாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் விரைந்து வந்து கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு பிரசவத்திற்காக நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை நோக்கி விரைந்தது.

வரும் வழியிலேயே சோனியா பிரசவவலியால் துடித்தார். ரகுநாதபுரம் என்ற பகுதியில் சென்றபோது சோனியாவுக்கு பிரசவவலி அதிகமானது. அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.

ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண் வலியால் துடிப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆம்புலன்சில் இருந்த சோனியாவை இறக்கி வயல்வெளிக்கு அழைத்து சென்றனர். அங்கு சேலையை சுற்றி அரண் போல் தடுப்பு தடுத்து சோனியாவுக்கு கிராம பெண்கள் பிரசவம் பார்த்தனர். அங்கு சோனியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து தாயும், குழந்தையும் நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பார்த்த டாக்டர் தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

பிரசவத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பெண்ணுக்கு வயல்வெளியில் கிராம மக்கள் பிரசவம் பார்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com