வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேர் கைது - பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி

கொடைக்கானலில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.
Published on

கொடைக்கானல்,

கொடைக்கானலை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 45). நேற்று மதியம் இவர், கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் முனியாண்டியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.550-ஐ பறித்தனர். பின்னர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முனியாண்டி கொடைக்கானல் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையிலான போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஏரிச்சாலை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்தவுடன் 2 பேர் தப்பியோடி விட்டனர். 2 பேர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். விசாரணையில் அவர்கள், பெரியகுளம் வடகரையை சேர்ந்த முகமது பைசூல் (19), மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் முனியாண்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com