லக்னோ,
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இமாசலபிரதேசத்தின் ஹபிர்புர் நோக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு பஸ்சில் நேற்று முன்தினம் சென்று கொண்டு இருந்தனர். உத்தரபிரதேசத்தில் உள்ள இடாநகர் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் சத்தம் போட்டனர். அலறல் சத்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அனைவரையும் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 35 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.