உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் ரூ.45 லட்சத்தில் குடிமராமத்து பணிகள்

உளுந்தூர்பேட்டை அருகேஏரியில் ரூ.45 லட்சத்தில் குடிமராமத்து பணிகளை குமரகுரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி தூர்ந்து போனதோடு மதகுகள் சேதமடைந்து காணப்பட்டன. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரூ.45 லட்சம் மதிப்பில் ஏரியில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குடிமராமத்து பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர் தலைமை தாங்கினார், உதவி செயற்பொறியாளர் அன்பரசன் பிரசன்னா, பரிக்கல் ஏரி சங்க தலைவர் தண்டபாணி, பொருளாளர், சேகர், நிர்வாகிகள் தணிகாசலம் , கண்ணன், சக்கரபாணி, யாசகன், திருமால், கோதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பேரவை பொருளாளர் பழனி மலை, முன்னாள் கவுன்சிலர் தணிகாசலம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவராஜ், துரைக்கண்ணு, திருநாவலூர் கூட்டுறவு சங்க துணை தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com