மது விற்ற 68 பேர் கைது; 1,295 பாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மது விற்பனை செய்த 68 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,295 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Published on

திண்டுக்கல்,

காந்திஜெயந்தியான நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுவிலக்குப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி தலைமையில், இன்ஸ்பெக்டர் வீரகாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜ் மற்றும் போலீசார் திண்டுக்கல் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி பகுதியில் ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதை போலீ சார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (வயது 55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர். இதேபோல் திண்டுக்கல்லில் மேலும் 2 இடங்களில் மதுபானம் விற்ற கணேசன் (40), சசிகுமார் (35) ஆகியோர் சிக்கினர்.

இந்த 3 பேர் உள்பட மது விற்றதாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 68 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 1,295 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com