பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நயினாங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(வயது50). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு சென்றார். அப்போது வயலில் ஒரு மின்கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் கருப்பையா மின்கம்பியை மிதித்து விட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பையா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பரிதாப சாவு
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் இறந்த சம்பவம் நயினாங்குளம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருப்பையாவுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.