செல்போனில் நைசாக பேசி ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை பெற்று, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் எடுத்த கும்பல் - ராமநாதபுரத்தில் பரபரப்பு

செல்போனில் நைசாக பேசி ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை பெற்று ராமநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் எடுத்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 58). ராமநாதபுரம் சேதுபதி நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அப்போது பேசிய ஒரு ஆணும், பெண்ணும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர். மேலும் ஏ.டி.எம். கார்டு பழையதாகிவிட்டால் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்ததாக தெரிகிறது. கிருஷ்ணமூர்த்தியும் தனது ஏ.டி.எம். கார்டினை மாற்றித்தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அவரிடம் ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனது ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணையும், அதன் ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்து விரைவாக புதுப்பித்து தருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் வங்கி கணக்கில் இருந்து மர்ம கும்பல், 4 முறையாக மொத்தம் 99,968 ரூபாயை எடுத்துவிட்டனர்.

இந்த நிலையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற கிருஷ்ணமூர்த்தி தனது வங்கி கணக்கில் பணம் குறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரித்த போது, போனில் பேசிய மோசடி நபர்கள் பணம் எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குபதிவு செய்து, மோசடி கும்பலை தேடிவருகிறார்.

செல்போனில் நைசாக பேசி ஏ.டி.எம். கார்டு எண்ணை வாங்கி, பணமோசடி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த கும்பலிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரே பணத்தை இழந்திருப்பது ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com