

அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2009-ம் பெய்த கடும் மழைக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக மழையின் அளவு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்தது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அரியலூரில் ஏரிகள், குளங்கள் நிரம்பின. அரியலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள வண்ணான் குட்டைக்கு மழைநீர் வரவில்லை. நீர்வரும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டதால் அந்த குட்டையில் இருந்த நீர்வற்றி தற்போது அதில் சிறுவர்கள், வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு
மேலும், மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான பொன்னேரி, சுத்தமல்லிஅணை, சுக்கிரன் ஏரி, குழுமூர், ராயம்புரம், செந்துறையில் உள்ள மிக பெரிய ஏரிகள் வறண்டு போனது. இதனால் கால்நடைகளுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம், வெள்ளாறு ஆற்றில் அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு விட்டதாலும், அதிகமான சுண்ணாம்பு சுரங்கத்தாலும் நிலத்தடி நீரின் அளவு குறைந்து போனது. கொள்ளிடம் குடிநீரை மாவட்டம் முழுவதும் அரசு வினியோகித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் பராமரிப்பு இன்றி குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகிறது. வரும் மழைகாலத்திற்குள் ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரினால் மழைகாலங்களில் குளங்கள் நிரம்பி வறட்சி நீங்கும். இதே வறட்சி நிலை நீடித்தால் அரியலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.