பெங்களூரு,
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை அம்பலப்படுத்திய கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா, சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பாக 2 அறிக்கைகளையும் அவர் தாக்கல் செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா மற்றும் சில சிறை அதிகாரிகளை கர்நாடக அரசு கூண்டோடு மாற்றியது.
சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்பது தெரிவிக்கப்பட்டது.
சசிகலா உள்ளிட்ட கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தன்னுடைய குற்றச்சாட்டில் டிஐஜி ரூபா ஸ்திரமாக உள்ளார். அவர் தொடர்ச்சியாக இது தொடர்பாக மீடியாக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலுரைத்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி பேசுகையில், டிஐஜி ரூபா மீது அதிமுக அம்மா அணி சார்பில் மானநஷ்ட வழக்கு தொடரப்படும். வேறு துறைக்கு மாற்றப்பட்ட பின்பும், ரூபா தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது முறையல்ல. தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் ரூபா அரசியலுக்கு வரட்டும், எதிர்த்து போட்டியிட தயார் என கூறிஉள்ளார்.