கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது

கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
Published on

கொளத்தூர்,

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுவுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 12 வார்டு உறுப்பினர்களில் அ.தி.மு.க. 3 இடங்களிலும், பா.ம.க. 3 இடங்களிலும், தி.மு.க. 4 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றின

இந்த நிலையில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒன்றியக்குழு தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றிய போதிலும், தாழ்த்தப்பட்டோர் பிரிவு உறுப்பினர் யாரும் இல்லாததால் ஒன்றியக்குழு தலைவர் தேர்வில் இழுபறி ஏற்பட்டு வந்தது. இதற்காக 2 முறை ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அ.தி.மு.க. கைப்பற்றியது

இதனிடையே தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11-வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலயில் அ.தி.மு.க.வில் இணைத்தார். இதைத் தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்களில் அ.தி.மு.க. கூட்டணியின் பலம் அதிகரித்தது.இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் நடந்தது. தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் வாக்கெடுப்பின் அடிப்படையில் அவர் 7 வாக்குகள் பெற்று ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. வெற்றி பெற்ற புவனேஸ்வரிக்கு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com