512 வயதுடைய உலகின் மிக முதிர்ந்த சுறா கண்டுபிடிப்பு

512 வயதுடைய உலகின் மிக முதிர்ந்த சுறா கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது விஞ்ஞானிகள் இடையே ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.
Published on

வடக்கு அட்லாண்டிக் சமுத்திர பகுதியில் மீனவர்கள் சமீபத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். குழுவாக சென்ற 28 கிரீன்லாந்து சுறாக்களில் ஒன்று அவர்கள் வலையில் பிடிபட்டது. ஆய்வு செய்ததில் அதன் வயது 512 என தெரிய வந்தது.

கிரீன்லாந்து சுறாக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. அளவே வளரும். இவை பல நூறு ஆண்டுகள் வரை வளரும் தன்மை கொண்டவை. நிபுணர்கள் ஆய்வு செய்ததில் இதன் நீளம் 18 அடி என கண்டறியப்பட்டு உள்ளது. இதனடிப்படையிலும், ரேடியோ கார்பன் முறைப்படியும் இதன் வயது 272 முதல் 512 வரை இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சுறா பூமியில் மிக வயது முதிர்ந்த முதுகெலும்பு கொண்ட உயிரினம் ஆகும். இதனால் அமெரிக்க நாடு கண்டுபிடிக்கப்பட்டது, நெப்போலியன் போர்கள் மற்றும் டைட்டானிக் கப்பல் மூழ்கியது உள்ளிட்ட உலகின் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தபொழுது இந்த சுறா கடலில் சுற்றி வந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் அக்பர் வாழ்ந்த காலத்திற்கும் முந்தைய காலத்தில் இருந்து இந்த கிரீன்லாந்து சுறா வாழ்ந்து வந்துள்ளது.

இவற்றின் மீது நடத்தப்படும் ஆய்வு முடிவுகள் நீண்டகால பருவ மாற்றம் மற்றும் மாசுபாடு ஆகியவற்றின் தாக்கங்கள் பற்றிய காரணிகளை கண்டறிய உதவும். அடுத்து இதன் மரபணுவை வைத்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதனால், ஏன் பெருமளவிலான உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உயிர் வாழ்கின்றன என்பது பற்றியும், மனிதர்கள் உள்பட பல்வேறு இனங்களின் வாழ்நாளை எது தீர்மானம் செய்கிறது என்பது பற்றியும் விடை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com