முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணை மிரட்டி 3 பவுன் தாலி செயின் பறிப்பு - சிறுவன் உள்பட 2 பேர் கைது

வேலூரில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் முகவரி கேட்பதுபோன்று நடித்து, அவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 3 பவுன் தாலி செயினை பறித்துச்சென்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்ணை மிரட்டி 3 பவுன் தாலி செயின் பறிப்பு - சிறுவன் உள்பட 2 பேர் கைது
Published on

வேலூர்,

வேலூர் தொரப்பாடி காந்திஜி 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மனைவி சாயினா (வயது25). இவர் கடந்த 28-ந்தேதி இரவு 7 மணியளவில் அதேபகுதியில் மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். கோவில்மானியம் தெருவில் சென்றபோது 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் சாயினாவை நிறுத்தி முகவரி கேட்பதுபோன்று பேச்சுக்கொடுத்தனர். பின்னர் திடீர் என்று அவர்கள் சாயினாவை கீழேதள்ளினர். இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்து விட்டார். அப்போது மர்ம நபர்கள் இருவரும் சாயினாவை மிரட்டினர்.

பின்னர் அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை கொடுக்குமாறும் இல்லையென்றால் கழுத்தை நெரித்து கொன்றுவிடுவோம் என்றும் கூறினர். ஆனால் சாயினா செயினை கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் அவருடைய கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பாகாயம் போலீசில் சாயினா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சாயினாவை தாக்கி செயினை பறித்தது அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்த அபிஷேக் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 பவுன் செயின் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com