வீட்டுமனைப்பட்டா கேட்டு பவானி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

வீட்டுமனைப்பட்டா கேட்டு பவானி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
Published on

பவானி,

பவானி அருகே உள்ள பழனிபுரம், சீனிவாசபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று மதியம் 12 மணி அளவில் பவானி தாலுகா அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்தனர். பின்னர் திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே தாசில்தார் வீரலட்சுமி வெளியே வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, நாங்கள் இந்த பகுதியில் சுமார் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால் எங்கள் பகுதியில் உள்ள 1,300 குடும்பங்களுக்கு இன்னும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை.

கடந்த 2010-ம் ஆண்டு ஒரு சிலருக்கு வழங்கப்பட வேண்டிய பட்டாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர். மேலும் அதுகுறித்த கோரிக்கை மனுவையும் தாசில்தாரிடம் அளித்தனர்.

அதற்கு தாசில்தார், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com