

தர்மபுரி,
தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் எழில்நங்கை (வயது 27). இவருக்கும் செல்வக்குமார் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் எழில்நங்கை அணிந்திருந்த நகைகளை கணவர் வாங்கி கொண்டதாகவும், அதன்பின் அவருடைய பெற்றோரிடம் உள்ள சொத்துக்களை எழுதி வாங்கி வர வேண்டும் என்று கணவர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தநிலையில் செல்வக்குமார் வரதட்சணையாக எழில்நங்கையின் பெற்றோரிடம் சொத்துக்களை எழுதி வாங்கி வரவேண்டும் என தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எழில்நங்கை தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணையாக தனது பெற்றோரின் சொத்துகளை எழுதி வாங்கி வருமாறு கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய மகளிர் போலீசார், செல்வகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.