பெங்களூரு,
கலபுரகி மருத்துவ கல்லூரியில் தொலைதூர தீவிர சிகிச்சை பிரிவு சேவை தொடக்க நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு, அந்த சேவையை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-
ஆக்ஷன் கொரோனா குழு(ஏ.சி.டி.) என்ற அமைப்பின் உதவியுடன் கலபுரகி மருத்துவ அறிவியல் கல்லூரியில் 24 மணி நேர தொலைதூர தீவிர சிகிச்சை பிரிவு சேவை(டி.ஐ.சி.யு.) தொடங்கப்பட்டுள்ளது. இது இந்த சேவை தொடங்கப்படும் 2-வது மருத்துவ கல்லூரி ஆகும். இந்த சேவையில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவு சேவை மற்றும் தரமான சிகிச்சை கிடைக்கும்.
மருத்துவ நிபுணர்கள்
அந்த மருத்துவமனையில் 26 படுக்கைகளை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது. இதில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 24 மணி நேரமும் செயல்படும். மருத்துவமனைகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த டாக்டர் திரிலோக்சந்திரா தலைமையிலான குழு தயாராக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டுதல்படி சிகிச்சை அளிக்கப்படும். கண்காணிப்பு கேமரா, இணையதளம் மூலம் நோயாளிகளின் அப்போதைய நிலையை அடிப்படையாக கொண்டு மருத்துவ நிபுணர்கள் அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து ஆலோசனை கூறுவார்கள்.
புதிய திட்டம்
கொரோனா நோயாளிகள் இறப்பை தடுக்க இந்த புதிய திட்டம் உதவும். தேவையான அரசு மருத்துவமனைகளில் இத்தகைய தொலைதூர தீவிர சிகிச்சை பிரிவு சேவை வழங்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.