சென்னையில் ஒரே நாளில் 55 போலீசாரை தாக்கிய கொரோனா அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 7 பேர் பாதிப்பு

சென்னை போலீசில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 55 பேரை கொரோனா தாக்கியது. அரும்பாக்கம் போலீஸ்நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
Published on

சென்னை,

சென்னை போலீசில் கொரோனாவின் தாக்குதல் வேகம் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை போலீசில் 582 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் புதிதாக 55 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 637 ஆக உயர்ந்தது.

அரும்பாக்கம் போலீஸ் நிலையம்

சென்னை போலீசின் புதிய பாதிப்பில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஒரு பெண் இன்ஸ்பெக்டருக்கு நேற்று தொற்று உறுதியானது. அவரது கணவரான இன்ஸ்பெக்டர் ஏற்கனவே தொற்றில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரும்பாக்கம் போலீஸ்நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஏற்கனவே பாதிப்பில் உள்ளார். நேற்று குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரும், 5 போலீசாரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். அரும்பாக்கம் போலீஸ்நிலையம் நேற்று கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 2 இன்ஸ்பெக்டர்களின் அறைகளும் பூட்டப்பட்டன.

பணிக்கு திரும்பிய 236 பேர்

சென்னை போலீசில் பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று 236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேர் பூரண குணம் அடைந்து மீண்டும் பணியில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com