காரைக்குடி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் பெண் ஊழியர் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் புகார்

காரைக்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாயார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் பெண் ஊழியர் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் புகார்
Published on

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை பெத்தாட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குட்டியான். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கற்பகவல்லி (வயது 25). இவர் காரைக்குடி அருகே புதுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று அவருக்கு இரவு நேர பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்குவதற்கான அறையில் தங்கியிருந்தார்.

மறுநாள் காலையில் மாற்றுப் பணிக்கு வந்த ஊழியர்கள் அறையில் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். கற்பகவல்லி தனது துப்பட்டாவால் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவஇடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், கற்பகவல்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் கற்பகவல்லி தூக்குப்போட்டுக்கொண்ட அறையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கற்பகவல்லியின் தாயார் பேச்சிமுத்து, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சாக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com