தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.96.77 கோடியில் விமான ஓடுபாதை விரிவாக்க பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.96.77 கோடியில் விமான ஓடுபாதை விரிவாக்க பணிகள் தொடங்கியது.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெருகி வரும் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு 600.97 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.96 கோடியே 77 லட்சம் செலவில் விமான ஓடுபாதை விரிவாக்க பணிகள் தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நடந்தது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்து, விமான ஓடுபாதை விரிவாக்க பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான ஓடுபாதையின் அகலம் 30 மீட்டரில் இருந்து 45 மீட்டராகவும், அதன் இருபுறமும் 7 மீட்டர் அகலத்தில் நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது. மேலும் விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 5 பெரிய விமானங்களை நிறுத்தி வைத்து இயக்கவும் வசதி செய்யப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் விமான நிலைய கூடுதல் பொது மேலாளர் (கட்டுமானம்) ராதாகிருஷ்ணன், உதவி பொதுமேலாளர்கள் பிஜூ, சுப்பிரவேலு, அனுசுயா, மேலாளர்கள் கணேஷ், ஜெயராமன், ஆய்வாளர் விமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com