ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Published on

கடலூர்,

நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பத்தில் தனியார் வங்கிக்குரிய ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் உடைத்து திருட முயன்றார். இதுகுறித்து ஏ.டி.எம். மைய பொறுப்பாளர் அருள், நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லிக்குப்பம் எய்தனூரை சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 25), ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

கைதான விக்கி மீது நெல்லிக்குப்பம், கடலூர் புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மாமல்லபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 15 திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு விக்கியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, விக்கியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மத்திய சிறையில் உள்ள விக்கியிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com