விவசாயிகள் மீது தாக்குதல்: பா.ஜனதாவினரின் தலீபான் மனநிலை - சித்தராமையா தாக்கு

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பா.ஜனதாவினரின் தலீபான் மனநிலையை காட்டுவதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பா.ஜனதாவினரின் தலீபான் மனநிலையை காட்டுவதாக கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், விவசாயிகளை தனது எதிரிகள் என்று மத்திய அரசு நினைத்து கொண்டுள்ளது. அதன் காரணமாக அவர்களை போலீசார் மூலம் அடக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அவர்களை நேரடியாக கொல்ல முயற்சி செய்கிறது. உத்தரபிரதேசத்தில் மத்திய மந்திரியின் மகன் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது பா.ஜனதாவினரின் கொலை செய்யும் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

உத்தரபிரதேசத்தில் தற்போது நடைபெறும் பா.ஜனதா ஆட்சியில் தலித்துகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏழை மக்களின் மானம், மரியாதை எதுவும் பாதுகாப்பாக இல்லை. அங்கு அரசியல் சாசனம் முடங்கிவிட்டது. அதனால் அங்குள்ள பா.ஜனதா அரசை ஜனாதிபதி கலைக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள், எதிர்ப்புகளை பா.ஜனதாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இது அக்கட்சியினரின் தலீபான் மனநிலையை காட்டுகிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் செல்ல சென்ற பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்று அதில் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com