சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் திருக்குறளை மேற்கோள்காட்டி ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை

அரவக்குறிச்சி பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கில் கமல்ஹாசனுக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அப்போது திருக்குறளை மேற்கோள்காட்டி நீதிபதி அறிவுரை வழங்கினார்.
Published on

மதுரை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சியில் நான் தேர்தல் பிரசாரம் செய்த போது இந்து மதத்தை அவமதித்தும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக 14-ந்தேதி அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்தாமல், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். எனவே முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்திய தண்டனை சட்டத்தின் 2 பிரிவுகளின்கீழ் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார். அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் அந்த மனு மீதான தீர்ப்பை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது-

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்

என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

அதாவது சொற்களின் நன்மையை ஆராய்ந்து நல்லவர்கள் பேசும்போது, கேட்பவர்கள் தவறாக புரிந்து கொள்ளாத வண்ணம் பேச வேண்டும் சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாத சொற்களை சொல்லவே கூடாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

சர்ச்சை பேச்சுகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து விவாதங்கள் நடத்துவது மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதாகும். ஒரு சிறிய தீப்பொறி, காட்டையே அழித்துவிடும்.

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அங்கு கூடியிருக்கும் பார்வையாளர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வைப்பதாக பேச்சு இருக்க வேண்டும். நம் நாட்டில் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளால் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டது போதும்.

இருந்தபோதும், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 15 நாட்களுக்குள் கரூர் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெற வேண்டும். இந்த வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com