பல்லாரி, ஹாவேரியில் தனிமை முகாமில் இருப்பவர்கள் குத்தாட்டம் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

பல்லாரி, ஹாவேரியில் தனிமை முகாமில் தங்கி இருப்பவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிர்பலியும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மாநிலத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த முகாமில் தங்கி உள்ளவர்கள் தங்களுக்கு சுகாதாரத்துறையினர் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இதனால் முகாமில் தங்கி உள்ளவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ள சிலர் கவலையை மறக்க குத்தாட்டம் போட்டு உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

பல்லாரி டவுனில் உள்ள ஒரு தனிமை முகாமில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்ட சில வாலிபர்கள், இளம்பெண்கள் தங்களது கவலையை மறக்கும் வகையில் இந்தி, கன்னடத்தில் பிரபலமாக உள்ள பாடல்களை செல்போன்களில் இசைத்து குத்தாட்டம் போட்டு உள்ளனர். முகக்கவசம் அணிந்து வாலிபர்களும், இளம்பெண்களும் குத்தாட்டம் போடும் காட்சிகளை ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் பல்லாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் தனிமை முகாமில் தங்கி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக குத்தாட்டம் போடும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உண்மையான போராளிகள் கொரோனாவை வெல்ல போராடுகிறார்கள். பல்லாரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

இதுபோல ஹாவேரியில் உள்ள தனிமை முகாமில் தங்கி உள்ள முதியவர் உள்பட 4 பேர் சேர்ந்து கன்னட பாடலை இசைத்து, பாடலுக்கு ஏற்ப நடனமாடி குத்தாட்டம் போட்டனர். இதுதொடர்பான காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com