மும்பை ,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக கடந்த 3 மாதமாக ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் புறநகர் பகுதியில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் ஊழியர்கள் மும்பை செல்ல வசதியாக குறிப்பிட்ட பகுதியான வசாய்- விரார் மற்றும் பத்லாப்பூர்- பன்வெல் இடையே 500 பெஸ்ட் பஸ் சேவை இயக்கப்பட்டு வந்தது.
இந்த பஸ்சில் 25 பேர் மட்டும் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாளுக்கு நாள் கூட்டம் மிகுதியாகி வந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த புறநகர் பகுதியில் இருந்து மின்சார ரெயில் இயக்க மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வந்தார்.
மின்சார ரெயில்
இதனை தொடர்ந்து மின்சார ரெயில் போக்குவரத்து கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கப்பட்டது. ரெயில்களில் நேற்று முதல் கூடுதலாக துறை சார்ந்த பணியாளர்கள் பயணம் செய்ய அனுமதி அளித்து உள்ளது. இந்த நிலையில் புறநகர் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பெஸ்ட் பஸ் சேவை ரத்து செய்யப்பட்டதாக பெஸ்ட் பஸ் கழக பொது மேலாளர் சுரேந்திர குமார் தகவல் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் பணியாளர்கள் ரெயிலில் வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வழித்தடத்தில் பஸ்களை வரும் வாரம் முதல் இயக்க தொடங்குவோம் என அவர் தெரிவித்தார்.