சமூக இடைவெளி விதிகளை 2வது முறையாக மீறிய பா.ஜ.க. பெண் எம்.பி.

ஒடிசாவில் ஊரடங்கு சூழலில் சமூக இடைவெளி விதிகளை 2வது முறையாக பா.ஜ.க. பெண் எம்.பி. மீறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. ஒடிசாவில் நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஒடிசாவில் பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.பி. அபராஜிதா சாரங்கி, பறக்கும் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் சென்று நேற்று கலந்து கொண்டார். இதில் சமூக இடைவெளி விதிகளை மீறி அவர் செயல்பட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செய்தியில் பரபரப்புடன் காணப்பட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என பிஜு ஜனதா தளம் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து உள்ளது. ஊரடங்கு விதிகளை பின்பற்றி மக்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அவர் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

எனினும், ஊரடங்கு விதிகள் எதனையும் மீறவில்லை என சாரங்கி கூறியுள்ளார்.

கடந்த 4ந்தேதி, இதுபோன்று ஊரடங்கு சூழலில் சமூக இடைவெளி விதிகளை மீறினார் என அவர் மீது புகார் எழுந்தது. அனைத்து தரப்பு மக்களும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் இதற்காக அபராஜிதா, அபராதம் கட்டினார். அவர் மீது எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவானது.

இந்நிலையில், 2வது முறையாக பா.ஜ.க. பெண் எம்.பி. சமூக இடைவெளி விதிகளை மீறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com