புதுடெல்லி,
டெல்லி மேற்கு தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பர்வேஷ் வர்மா. பா.ஜனதாவை சேர்ந்த இவர் சர்ச்சை கருத்துக்களை கூறி அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்வார். டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று கூறியதால், தேர்தல் ஆணையம் இவரது பிரசாரத்துக்கு தடை விதித்தது. மேலும் டெல்லி வன்முறை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் இவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் டெல்லி வன்முறையில் உயிரிழந்த போலீஸ் ஏட்டு ரத்தன் லால், உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா ஆகியோரின் குடும்பத்துக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.