பா.ஜ.க. பிரமுகர்கள் 3 பேர் கைது

அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி முத்துவேல், வைரவேல், பொன்சேகர் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் காணிக்கைபுரம் கிராமத்தை சேர்ந்த வர் ஆரோன்குமார். மதபோதகர். இவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் சம்பவத்தன்று அரியலூர் மீனாட்சி நகரை சேர்ந்த மார்க்ஸ்ட், திருச்சியை சேர்ந்த அந்தோணி ஆகியோருடன் சேர்ந்து துண்டு பிரசுரத்தை எங்கள் பகுதியில் வினியோகம் செய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. கடுகூர் ஒன்றிய தலைவர் முத்துவேல்(வயது 25), மாவட்ட அலுவலக செயலாளர் வைரவேல்(39), மாவட்ட பொறுப்பாளர் பொன்சேகர்(47) ஆகிய 3 பேர் எங்களை அரியலூர் மேலத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று துன்புறுத்தினர். மேலும் இதனை அவர்கள் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பகிர்ந்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இது தொடர்பாக அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி முத்துவேல், வைரவேல், பொன்சேகர் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் எந்தவொரு மதங்களையோ, மதஉணர்வுகளையோ புண்படுத்தும் படியாக யார் நடந்து கொண்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com