மழையால் பஸ் போக்குவரத்து பாதிப்பு: 8 நாட்களில் ரூ.3.88 கோடி நஷ்டம் - கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்

மழையால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் 8 நாட்களில் ரூ.3.88 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல் தெரிவித்துள்ளது.
Published on

பெங்களூரு,

கர்நாடகம், மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் கர்நாடக அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ் சேவையும் 3 மாநிலங்களுக்கு இடையே பாதிப்பு அடைந்துள்ளது. கடந்த 4-ந் தேதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. நேற்றும் பஸ் சேவை பாதிக்கப்பட்டது.

கடந்த 8 நாட்களாக பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.3.88 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து பாதிப்பினால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு நேற்று வரை ரூ.2.24 கோடி திரும்ப வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக பஸ்களும், பஸ் நிலையங்களும் சேதம் அடைந்துள்ளன. சேத மதிப்பை கணக்கீடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com