ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... நிலவரம் என்ன..?

கோப்புப்படம்
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உச்சம் சென்று, பின்னர் குறையத் தொடங்கியது. கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனையானது. இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,080-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,760-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.266-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.






