தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

இருதினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் ஒரே நாளில் 19 செ.மீ. பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, நீலகிரி, கரூர், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகிற 6-ந்தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், அருப்புக்கோட்டை 4 செ.மீ., சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அயனாவரம், பெரம்பூர் தலா 3 செ.மீ., வால்பாறை, சின்னக்கல்லாறு, சோலையாறு, எரையூர், மேட்டூர் தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com