

சென்னை,
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று பிற்பகலில் சென்னை வருகின்றனர். இந்தக் குழுவினர், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளனர்.
தேர்தல் ஆணையர்கள், தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளனர். தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான பேட்டியையும் தேர்தல் ஆணையர்கள் அளிக்கவுள்ளனர். தமிழகத்தில் மூன்று நாள்கள் பயணம் முடிந்ததும், தேர்தல் ஆணையர்கள் கேரள மாநிலத்திற்குச் செல்லவுள்ளனர்.