11 அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி மையம் தொடங்க வேண்டும்

பள்ளிக்கல்வி துறை அறிவித்தபடி விருதுநகர் மாவட்டத்தில் 11 அரசு பள்ளிகளில் உடனடியாக நீட் தேர்வு பயிற்சி மையத்தை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
11 அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி மையம் தொடங்க வேண்டும்
Published on

விருதுநகர்,

வரும் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதற்காக பள்ளிக்கல்வி துறை தமிழகம் முழுவதும் 466 பயிற்சி மையங்களை தொடங்க உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 14 பயிற்சி மையங்களை தொடங்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது. இதில் 3 பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆகும். இதுதவிர படந்தால், எம்.ரெட்டியபட்டி, சுந்தரபாண்டியம், வீரசோழன், டி.ராமச்சந்திராபுரம், ஆலங்குளம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், சத்திரப்பட்டியில் உள்ள 2 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், திருத்தங்கல், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்த பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிற்சி மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இந்த பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பயிற்சியை நடத்துவதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பயிற்சி அளித்தால் தான் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறும் அளவிற்கு பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கல்வி ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் பயிற்சி தொடங்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல. கிராமத்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் பள்ளிக்கல்வி துறை இதுபற்றி கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேதனை தரும் விஷயமாகும்.

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு இம்மாவட்டத்தில் உள்ள 11 அரசு பள்ளிகளிலும் நீட் தேர்வுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் இம்மாவட்டத்தில் உள்ள கிராமப்புறமாணவர்களின் மருத்துவர் கனவு நிறைவேறாமல் போய்விடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com