119 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

சின்னதாராபுரத்தில் 119 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
119 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
Published on

க.பரமத்தி,

அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று 119 பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 28 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியபோது கூறியதாவது.

பல தலைமுறைகளாக பட்டா இல்லாமல் சிரமப்பட்டுவந்த செல்வநகர், திருமாநிலையூர், ஒத்தக்கடை, கோதூர் போன்ற பகுதிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த வகையில் சின்னதாராபுரம், கூடலூர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் நில அளவைத்துறை, வருவாய்த்துறை, அலுவலர்களை கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் தனிபட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனை பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களால் தான் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னோடி மாநிலமாக திகழ் கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் பிரபு, மண்டல துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சாந்தி மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.மார்க்கண்டேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com