

ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை ராணுவ படைகளுக்கு, 2018-ம் ஆண்டுக்கான சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி போலீஸ், சி.ஐ.எஸ்.எப். மற்றும் சி.ஏ.பி.எப். துணை ராணுவ பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு மொத்தம் 1223 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
படைப்பிரிவு வாரியான பணியிட விவரம்:
டெல்லி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆண்கள் 97 பேரும், பெண்கள் 53 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். சி.ஏ.பி.எப். பிரிவுகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 1073 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். சி.ஐ.எஸ்.எப். படைப்பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் (எக்சிகியூட்டிவ் ) பணிக்கான காலியிட விவரம் பின்னர் வெளியாகும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-8-2018-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2-4-2018-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு (தாள்1) 4-6-2018 மற்றும் 10-6-2018-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இரண்டாம் தாள் தேர்வு 1-12-2018-ந் தேதி நடைபெற உள்ளது. இவை பற்றிய விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.