12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவு வெளியீடு : 22.65 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 22.65 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.
12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவு வெளியீடு : 22.65 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி
Published on

மும்பை,

மராட்டியத்தில் கடந்த மே மாதம் வெளியான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 169 பேர் தோல்வி அடைந்தனர். இவர்களுக்கு கடந்த மாதம் மறுதேர்வு நடந்தது.

இந்த தேர்வை புனே, நாக்பூர், அவுரங்காபாத், மும்பை, கோலாப்பூர், அமராவதி, நாசிக், லாத்தூர், கொங்கன் ஆகிய 9 கல்வி மண்டலங்களை சேர்ந்த 1 லட்சத்து 2 ஆயிரத்து 160 பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 75 ஆயிரத்து 51 பேர் மாணவர்கள். 27 ஆயிரத்து 109 பேர் மாணவிகள்.

அவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களுக்கான தேர்வை எழுதினர். இந்த நிலையில் மறுதேர்வு முடிவுகளை நேற்று மாநில உயர் மற்றும் மேனிலை கல்வி வாரியம் வெளியிட்டது.

இதில், மறுதேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 23 ஆயிரத்து 140 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ள னர். இதன் தேர்ச்சி விகிதம் 22.65 சதவீதம் ஆகும். மாணவர்களில் 15 ஆயிரத்து 890 பேரும், மாணவிகளில் 7 ஆயிரத்து 250 பேரும் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

குறிப்பாக மும்பை மண்டலத்தில் மறுதேர்வை எழுதிய 29 ஆயிரத்து 57 மாணவர்களில் 5 ஆயிரத்து 600 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இதன் தேர்ச்சி விகிதம் 19.27 ஆகும். இதர மண்டலங்களில் புனே 20.77, நாக்பூர் 25.51, அவுரங்காபாத் 28.50, கோலாப்பூர் 25.94, அமராவதி 21.44, நாசிக் 22.32, லாத்தூர் 31.48, கொங்கன் 19.75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com