விற்பனைக்கு வைத்திருந்த 16 பச்சை கிளிகள் பறிமுதல் தாய், மகனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

வேலூரில் விற்பனைக்கு வைத்திருந்து 16 பச்சை கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிளிகளை வைத்திருந்த தாய், மகனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விற்பனைக்கு வைத்திருந்த 16 பச்சை கிளிகள் பறிமுதல் தாய், மகனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
Published on

வேலூர்,

வேலூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் சண்டே பஜாரில் பச்சை கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின்பேரில், உதவி வனபாதுகாவலர் பாலசுப்பிரமணி அறிவுரையின்படி நேற்று அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் வனச்சரக அலுவலர் குமார், வனவர் கண்ணன், வனக்காப்பாளர்கள் சுப்பிரமணி, பக்தன், பழனி ஆகியோர் நேற்று நடந்த சண்டே பஜாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது வேம்புலியம்மன் கோவில் அருகில் பச்சை கிளிகள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

ஒரு பெண் மற்றும் ஒரு வாலிபர் என இருவர் கிளிகளை விற்றுக்கொண்டிருந்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் விற்பனைக்காக 8 கூண்டுகளில் அடைத்து வைத்திருந்த 16 பச்சை கிளிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கிளிகளை விற்பனைக்கு வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த வேலுவின் மனைவி ராணி (40), அவருடைய மகன் சதீஷ் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் திருப்பூர் பகுதியில்இருந்து கிளிகளை வாங்கி வந்து வேலூரில் விற்பனை செய்தது தெரியவந்தது. 2 கிளிகள், அதை அடைத்து வைப்பதற்கான கூண்டோடு ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்துள்ளனர்.

பிடிபட்ட இருவருக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 16 கிளிகளும் அமிர்தி வனப்பகுதியில் விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com