விசைப்படகு பழுதானதால் கோவா ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 17 பேர் மீட்பு

மீன்பிடிக்க சென்ற போது விசைப்படகு பழுதானதால் கோவா ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 17 பேர் மீட்கப்பட்டனர்.
விசைப்படகு பழுதானதால் கோவா ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 17 பேர் மீட்பு
Published on

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே இரவிபுத்தன்துறையை சேர்ந்தவர் ஜகர்சன் (வயது 36). இவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும் குமரியை சேர்ந்த 6 மீனவர்கள், திருவனந்தபுரத்தை சேர்ந்த 5 பேர், வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் என 17 பேர் கடந்த 20-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 24-ந் தேதி கோவா ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென விசைப்படகில் என்ஜின் பழுதானது. இதனால், அவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் உறவினர்களுக்கும், மீனவர் அமைப்புகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். ஆழ்கடலில் தவிக்கும் 17 மீனவர்களையும் மீட்கக்கோரி குமரி மாவட்ட மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மீட்பு

இந்தநிலையில் இரவிபுத்தன்துறையை சேர்ந்த ரெஜின் (42), சிசில் (40) ஆகியோர் தலைமையில் 2 விசைப்படகில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டு கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் கோவா கடல் எல்லை பகுதியில் சென்ற போது, ஜகர்சனின் விசைப்படகு பழுதாகி நிற்பதை கண்டனர்.

இதையடுத்து பழுதடைந்த விசைப்படகையும், அதில் இருந்த 17 மீனவர்களையும் மீட்டு கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மீனவர்களில் 10 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தனர். மற்றவர்கள் பழுதடைந்த விசைப்படகு என்ஜினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com