

மலைக்கோட்டை,
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று காலை அனைத்து வேளாளர் ஒற்றுமை அமைப்பு சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர்கள் கோடிலிங்கம் (சட்டம், ஒழுங்கு), பெரியண்ணன்(குற்றப்பிரிவு) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த ஏராளமானவர்கள் அந்த பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாளர் என்ற பெயர் தங்களுக்கு மட்டுமே உரியது, வேறு யாரும் அந்த பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும், தேவேந்திர குல வேளாளர் என்று இனி யாரும் கூறக்கூடாது என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 3 பெண்கள் உள்பட 187 பேரை போலீசார் கைது செய்து, கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.