காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் கிடந்த உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் மூலம் ரூ.1 கோடி வசூல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 1,896 வாகனங்கள் ஏலம் விட்டு ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் கிடந்த உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் மூலம் ரூ.1 கோடி வசூல்
Published on

உரிமை கோரப்படாத வாகனங்கள்

தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்களை 2 மாதத்திற்குள் அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பொது ஏலம் நடத்தி அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என தமிழக போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 போலீஸ் நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கணக்கிடப்பட்டது.

ரூ.1 கோடி வசூல்

இதையடுத்து, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் பரிந்துரையின் பேரில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவின்பேரில், 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மேற்படி வாகனங்களை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு பின்னர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பொது ஏலம் காஞ்சீபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடத்தப்பட்டது.

இதில் உரிமைக்கோரப்படாத மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட 1,896 வாகனங்களை ஏலமிட்டதில், ரூ.1 கோடியே 11 லட்சத்து 29 ஆயிரம் தொகை வசூலிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com