கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

கோவை கோவில்பாளையம், சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
Published on

சரவணம்பட்டி

கோவை கோவில்பாளையம், சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டது.

தனிப்படை அமைப்பு

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி உட்கோட்டம் கோவில்பாளையம் மற்றும் சூலூர் போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தவதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜ், ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த தனிப்படையினர் நேற்று காலை குரும்பாளையம்-காளப்பட்டி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இன்றி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

கைது

அதில், அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து போலீஸ் விசாரணையில், அவர்கள் கீரணத்தம் அருகே உள்ள வரதையங்கார்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 27), தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (27) என்பது தெரியவந்தது.

மேலும் கண்ணன் மீது தஞ்சாவூர் நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் 3 வழிப்பறி வழக்குகளும், பொள்ளாச்சி மற்றும் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும் அவர்கள் இருவரும் வெங்டேஷ்வரா நகர், கோட்டபாளையம், அத்திபாளையம், கீரணத்தம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளை நோட்டமிட்டு திருடியது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 55 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் திருட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

விரைந்து செயல்பட்டு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com