2 குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை: சமையல் தொழிலாளி கைது

வேலைக்கு செல்லும்படி மனைவி கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த சமையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
2 குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை: சமையல் தொழிலாளி கைது
Published on

பெங்களூரு,

தமிழ்நாட்டை சேர்ந்தவர் லட்சுமி சங்கரி. இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதுபோல கேரளாவை சேர்ந்தவர் ஜடின். இவர் சமையல் தொழிலாளி ஆவார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி சங்கரியும், ஜடினும் ரெயிலில் ஒன்றாக பயணம்செய்தனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் 2 பேரும் தங்களின் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். மேலும் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த பழக்கம் அவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் ஜடினும், லட்சுமி சங்கரியும் பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அக்ஷயாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்குதவுசினி(வயது 3), சாஸ்தா குரி(1) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜடின் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்து உள்ளார். இதனால் அவரை வேலைக்கு செல்லும்படி லட்சுமி சங்கரி கூறி வந்து உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை லட்சுமி சங்கரி வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இருந்த ஜடின் இரவு திடீரென 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து உள்ளார்.இதில் 2 குழந்தைகளும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தன. இதில் குழந்தை சாஸ்தா குரி பரிதாபமாக இறந்தது. தவுசினி உயிருக்கு போராடினாள்.

இதற்கிடையே வேலைக்கு சென்று இருந்த லட்சுமி சங்கரி வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது குழந்தை சாஸ்தா குரி பிணமாக கிடப்பதையும், தவுசினி உயிருக்கு போராடியதையும் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜடினிடம் கேட்ட போது, வேலைக்கு செல்லுமாறு கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தைகளின் கழுத்தை நெரித்ததாக அவர் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தவுசினியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் தவுசினியும் இறந்து விட்டாள். இதுபற்றி அறிந்த உளிமாவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜடினை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. வேலைக்கு செல்லும்படி மனைவி கூறியதால் 2 குழந்தைகளை தந்தையே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com