வேதாரண்யம் அருகே ஊர்க்காவல் படை வீரரின் 2 வீடுகள் எரிந்து சேதம் ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்

வேதாரண்யம் அருகே ஊர்காவல் படை வீரரின் 2 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தன.
வேதாரண்யம் அருகே ஊர்க்காவல் படை வீரரின் 2 வீடுகள் எரிந்து சேதம் ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் கத்தரிப்புலம் கிராமம் பனையடிகுத்தகை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருடைய மகன் மணிவண்ணன் (வயது30). இவர் வேதாரண்யம் ஊர்க்காவல் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது.

இவருக்கு சொந்தமாக அடுத்தடுத்து இரண்டு கூரை வீடுகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் தனது சகோதரிக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக அருகிலுள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீடுகள் தீப்பிடித்தது

பின்னர் இரவில் உணவு பரிமாறுவதற்கு தங்கள் வீட்டில் உள்ள வாழை மரத்தில் இருந்து வாழை இலை எடுக்க வந்துள்ளார். அப்போது தனது 2 கூரை வீடுகளும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது.

இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதன் சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவினால் விபத்து ஏற்பட்டதா? அல்லது யாராவது வீட்டுக்கு தீவைத்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிவாரணம்

வேதாரண்யம் தாசில்தார் முருகு மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com