கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்ட விவகாரம்: மேலும் 2 பேர் கைது

நாகர்கோவிலில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்ட விவகாரத்தில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்ட விவகாரம்: மேலும் 2 பேர் கைது
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43), மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு செட்டிகுளத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து டிக்கெட் வாங்க முயன்றார். இதை அறிந்த தியேட்டர் ஊழியர்கள் உடனே கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேசை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலமாக கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ரமேஷின் நண்பர்களான பள்ளிவிளையை சேர்ந்த தினகரன் மற்றும் அறுகுவிளையை சேர்ந்த ஜோசப் மனோவா ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இவர்களில் தினகரன் கொச்சியில் செயல்படும் மத்திய அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

2 பேர் கைது

இதைத் தொடர்ந்து தினகரன் மற்றும் ஜோசப் மனோவா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரம் தினகரனுக்கு சொந்தமானது என்றும், அந்த ஜெராக்ஸ் எந்திரத்தை ஜோசப் மனோவா வீட்டில் வைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததும் தெரிய வந்தது.

அதன் பிறகு மத்திய அரசு ஊழியரான தினகரன் மற்றும் ஜோசப் மனோவா ஆகியோரையும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com