திருவல்லிக்கேணியில் நடிகர் வீட்டில் நகை, பணம் திருட்டு: 2 பெயிண்டர்கள் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் நடிகர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெயிண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணியில் நடிகர் வீட்டில் நகை, பணம் திருட்டு: 2 பெயிண்டர்கள் கைது
Published on

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்தவர் அருண் பாலாஜி (வயது 37). இவர் தேவர்கொடி, சும்மாவே ஆடுவோம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மீன் மற்றும் இரும்பு வியாபாரமும் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடந்தது.

இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.50 லட்சம் ரொக்க பணம், 5 சவரன் நகை திருட்டு போய்விட்டதாக அருண் பாலாஜி, அண்ணா சதுக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில் அருண் பாலாஜி வீட்டில் பெயிண்டிங் வேலை பார்த்த விழுப்புரத்தை சேர்ந்த மணிகண்டன், இளங்கோவன் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தாங்கள் ரூ.5 லட்சம் பணம் மற்றும் நகையைத்தான் திருடினோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். ரூ.50 லட்சம் திருட்டு போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட வழக்கில், ரூ.5 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com