

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்
இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
திருச்சி,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
பொங்கல் பண்டிகை
2017 - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் வருகிற 18-ந் தேதி இரவு 10 மணி வரை தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் கீழ்கண்ட தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.
தற்காலிக பஸ் நிலையங்கள்
1. தஞ்சை மார்க்கமாக செல்லும் பஸ்கள் சோனா, மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருந்து இயக்கப்பட உள்ளன. 2. புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மன்னார்புரம் ரவுண்டானாவில் இருந்து இயக்கப்பட உள்ளது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமின்றி வழக்கம் போல மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு நகர சுற்று பஸ்கள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி தற்காலிக பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படா வண்ணம் தகுந்த காவல் துறையின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக் கழிப்பிடவசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவல் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.