2 வயது குறைந்த வாலிபரை காதலித்த இளம்பெண் தற்கொலை - பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்

கோவையில் 2 வயது குறைந்த வாலிபரை காதலித்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
2 வயது குறைந்த வாலிபரை காதலித்த இளம்பெண் தற்கொலை - பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்
Published on

கோவை,

மதுரை மாவட்டம் தேனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் நந்தினி (வயது 22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக முகநூல் மூலம் கோவையை சேர்ந்த ஒரு 20 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் நந்தினிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் கோவை வந்து தனது காதலனை சந்தித்தார். அவருக்கு அந்த வாலிபர் கோவை சேரன்மாநகரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்குவதற்கு அறை எடுத்து கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து 2 பேரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து கொண்டனர். இந்த காதல் விவகாரம் வாலிபரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அதன்பேரில் வாலிபரின் பெற்றோர் அந்த இளம்பெண் குறித்து கேட்டனர். அதற்கு அவர், தான் தன்னைவிட 2 வயது அதிகமான இளம்பெண்ணை காதலிப்பதாக கூறினார். இது வாலிபரின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து வாலிபரின் பெற்றோர் நந்தினியின் பெற்றோரை நேரில் சந்தித்து எங்களது மகனைவிட உங்கள் மகளுக்கு 2 வயது அதிகம். எனவே எங்கள் மகனிடம் உங்கள் மகள் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்த சொல்லுங்கள் என்று கூறினார்கள். இதையடுத்து நந்தினியிடம் அந்த வாலிபரிடம் பேச வேண்டாம் என்று பெற்றோர் அறிவுரை கூறினார்கள்.

இது அவருக்கு வேதனையை ஏற்படுத்தியது. அத்துடன் அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் இருந்த நந்தினி சொந்த ஊரில் உள்ள தனது அண்ணிக்கு போன்செய்து எங்களது காதலை பிரித்து வீட்டீர்கள்... இப்போது உங்களுக்கு சந்தோஷமா? என்று கேட்டு விட்டு செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டார்.

பின்னர் விடுதியில் உள்ள அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com