26-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் சேலத்தில் வேல்முருகன் பேட்டி

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் வருகிற 26-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் கூறினார்.
26-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் சேலத்தில் வேல்முருகன் பேட்டி
Published on

சேலம்,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நேற்று சேலம் 5 ரோடு அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் சேலத்துக்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். நீதிபதிகளையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும் எச்.ராஜா தரக்குறைவாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. மதகலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு இனியும் கவர்னர் காலம் தாழ்த்தாமல் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்யாவிட்டால் வருகிற 26-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைக்குனிவு ஆகும். இதற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவர், அ.தி.மு.க. அரசு செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வருகிறார். இது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நடந்த நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டத்துக்கு நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயமோகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com